12 வயது மாணவி இயக்கிய ‘குண்டான் சட்டி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

12 வயது பள்ளி மாணவியான பி.கே.அகஸ்தி என்பவர் ‘குண்டான் சட்டி’ எனும் அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரெய்லரை இயக்குநர்கள் பேரரசு மற்றும் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டனர். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு…

12 வயது பள்ளி மாணவியான பி.கே.அகஸ்தி என்பவர் ‘குண்டான் சட்டி’ எனும் அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரெய்லரை இயக்குநர்கள் பேரரசு மற்றும் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டனர்.

இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி. உதயகுமார் மற்றும் தோல் ஏற்றுமதி கவுன்சில் இயக்குநர் செல்வம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இளம் இயக்குநர் பி.கே.அகஸ்தி, கொரோனா காலத்தில் அதிகமான புத்தகங்கள் படித்து அதனால் தூண்டப்பட்டு இந்த திரைப்படத்தை எடுத்துள்ளதாக கூறினார். இந்த திரைப்படத்திற்கு மக்கள்
அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.


இதன் பின்னர் பேசிய இயக்குநர் பேரரசு தெரிவித்ததாவது..

” 12 வயதில் ஒரு சிறுமி திரைப்படம் இயக்கியுள்ளது வியப்பாக உள்ளது. இந்த சிறுமி இயக்குநர் சங்கத்தில் இணைந்தால் சங்கத்திற்கு பெருமை, அவர் எங்கள்
சங்கத்தில் இணைய வேண்டும். எந்த வயதில் இயக்குநரானாலும் எங்கள் சங்கத்தில் அனைவருக்கும் வாக்கு உரிமை உண்டு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் ” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து  பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்ததாவது..

”தமிழ் குழந்தைகளுக்கு பிறந்த 2 வருடங்களிலேயே எல்லா அறிவும் வந்துவிடும் அதை
பெற்றோர் தான் கவனிப்பதில்லை. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் பார்த்த போது திருப்பதியாக இருந்தது படம் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட படங்களுக்கெல்லாம் முன்னோடி ஊமைவிழிகள் தான். எங்களை போன்ற இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் வாய்ப்பளித்தால் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுக்க முடியும். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு வழி தெரியாமல் உள்ளது. சரியான முடிவுகள் எடுக்க தெரியாதவர்கள் கூட மாற்று திறனாளிகள் தான். எத்தனை மாற்று திறனாளிகள் சினிமா துறையில் உள்ளார்கள். பல கோடி ரூபாய் போட்டு படத்தை தயாரித்து விட்டு படத்தின் கதையை தேடி கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களிடம் என்ன கதை சொல்வது.

தமிழ் சினிமா எங்கே செல்கிறது என தெரியவில்லை. இயக்குநர்களிடம் கதை கேட்டு நடிக்கும் நடிகர் இன்று யாருமில்லை. நாங்கள் திரைப்படங்கள் இயக்கும் போது, இயக்குநர்கள் மீது நடிகர்கள் நம்பிக்கை வைத்தார்கள் ஆனால் தற்போது நம்பி ‘ கையை ‘ மட்டும் வைக்கின்றனர். தற்போது இருக்கும் படங்களில் கதையே இல்லை. தயவு செய்து சினிமாவை காப்பாற்றுங்கள் இல்லையென்றால் குழந்தைகள் படம் எடுக்க
வர வேண்டும் “ என தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.