துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து சேதமடைந்த கட்டடங்களின் ஒப்பந்ததாரர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
துருக்கியில் கடந்த திங்கள்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,191-ஆக உயர்ந்துள்ளது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலநடுக்க பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்புப் பணிகள் குறைந்த வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டட ஒப்பந்ததார்களின் மீது அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
துருக்கியின் கட்டுமான விதிகளின்படி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், பொறியியல் தர அளவுகளைப் பின்பற்றி கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகளைப் பின்பற்றாததே ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சேதமடைந்த கட்டடங்களுக்கு பொறுப்பானவர்கள் என சந்தேகிக்கப்படும் 130 பேரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி துணை அதிபர் ஃபுவாட் ஓக்டே கூறியுள்ளார். அதே போல, பாதிக்கப்பட்ட கட்டடங்களுக்குப் பொறுப்பானர்கள் தண்டிக்கப்படுவார்கள். கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு கட்டடங்கள் குறித்த அனைத்து தகவல் குறித்தும் விசாரணை மேற்கொள்ளும் என்று நீதித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹடே மாகாணம், அன்டக்யா பகுதியில் இடிந்து விழுந்த 12 மாடி அடுக்குமாடி கட்டடத்தின் ஒப்பந்ததாரர் வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயற்சித்த போது இஸ்தான்புல் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், இடிந்து விழுந்த கட்டடத்தில் கூடுதல் அறைகளை கட்டுவதற்காக தூண்களை குறைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின்படி காஸியன்டப் மாகாணத்தில் 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
-ம.பவித்ரா