பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேரவையில் அவர் பேசியதாவது,
“பேரவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கொள்கை.
முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார். ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார்.
தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது” என தெரிவித்தார்.







