உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்ட பெண் ஊழியர் மீது காரை ஏற்றிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி – மீரட் அதிவிரைவுச் சாலையில் அமைந்துள்ள காசி சுங்கச் சாவடியில் நேற்று (13.05.2024) சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக கார் ஒன்றை நிறுத்தி உள்ளனர்.
ஆனால், கட்டணம் செலுத்த மறுத்த கார் ஓட்டுநர் சுங்கச் சாவடி பெண் ஊழியரை இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.
இதையும் படியுங்கள் : குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!
இதையடுத்து, படுகாயமடைந்த சுங்கச்சாவடி பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த சுங்கச் சாவடி ஊழியர் மீரட் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சுங்கச் சாவடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் மீரட் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து காசி சுங்கச் சாவடி மேலாளர் கூறியதாவது:
“டெல்லியில் இருந்து வந்த கார் எங்கள் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டார். சுங்கக் கட்டணம் செலுத்தக் கோரிய எங்கள் ஊழியர் மீது காரை ஏற்றிச் சென்றார். அவர் படுகாயமடைந்துள்ளார். காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







