போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு! அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி!

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை சென்னையில் இருந்து அரசு பேருந்தில் போலீசார் அழைத்து சென்றனர். பாஜக மாநிலத்…

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை சென்னையில் இருந்து அரசு பேருந்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடு முன் வைக்கப்பட இருந்த கொடிக் கம்பத்தை அகற்றும் போது,  மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்தியதாக பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பாஜக-வை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதை போல,  செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய வழக்கிலும் அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின் போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கிலும் நுங்கம்பாக்கம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர்.

இதைபோல, என் மண் என் மக்கள் பாதயாத்திரை தென்காசி மாவட்டத்தில் நடந்த போது அமர்பிரசாத் ரெட்டி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆழ்வார்குறிச்சி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.  இந்த வழக்கிலும் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் நாளை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.  இதற்காக இன்று சென்னை புழல் சிறையில் இருந்து அமர் பிரசாத் ரெட்டியை ஆயுதப்படை போலீசார் அழைத்துச் சென்றனர்.  அப்போது போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அமர் பிரசாத் ரெட்டியை தென்காசி வரை அரசு பேருந்தில் அழைத்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.