தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் டிசம்பர் 3-ம் தேதி புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 4-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் நாளை முதல் வரும் 5-ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் எச்சரிக்கை எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அமைச்சர்கள், 12 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாக கூடிய இடங்களில் இருக்கக் கூடிய பொதுமக்களை முன்கூட்டியே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் இதனை மாவட்ட ஆட்சியர்கள் இதனை உறுதி செய்திட வேண்டும்.
மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் இடங்களில் மழை நீர் அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மாநிலம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது, எனவே அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கான சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் மண்டல குழுக்களை அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு காவல் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். புயல் சின்னத்தை தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள வேண்டும்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.