முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசும், காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகா அரசும் தமிழ்நாட்டுக்குத் தொல்லைகள் கொடுப்பதாகக் கூறியுள்ளார். மேலும் முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு செல்பவர்கள் கேரள வனத்துறையின் முன் அனுமதி பெற்று , தேக்கடியில் பதிவு செய்த பின்னரே செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருப்பதையும் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து கர்நாடகா அரசு அண்மையில் நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில், மேகதாது அணை கட்டப்படும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திப்போம் எனக் கர்நாடகா முதலமைச்சர் சொல்லி இருப்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பிரச்னை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித கருத்தும் சொல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கேரள, கர்நாடகா அரசுகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்ட அனைத்து கட்சிகளும், கட்சி வித்தியாசம் இன்றி ஒன்றிணைய வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.