மக்களவை எதிர்கட்சித்தலைவராக ராகுல் காந்தி தேர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.…

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்து ரேபரேலி தொகுதியின் உறுப்பினராக உள்ளார். மக்களவையில் உறுப்பினராகவும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். மக்களவைத் தலைவர் தேர்தல் இன்று (ஜூன் 26) நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தியின் புதிய பொறுப்பிற்கு இந்தியா கூட்டணி வரவேற்கிறது. அவரது குரல் மக்கள் மன்றத்தில் (மக்களவையில்) தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.