“பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்; அதன் விளைவுதான் சிஏஏ சட்ட நிறைவேற்றம்” – மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா !

“பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவிற்கும் தோல்வி பயம் வந்ததன் காரணமாகத்தான் சிஏஏ சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளனர்”என மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம்…

“பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவிற்கும் தோல்வி பயம் வந்ததன் காரணமாகத்தான் சிஏஏ சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளனர்”என மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் நேற்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்திற்குப் பின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “பாஜகவின் மதவாத செயல் திட்டங்களை நிறைவேற்றிடத் தேர்தலைக் கருவியாகச் சூழ்ச்சியோடு பயன்படுத்தி வருகிறது. இந்த பாசிச அபாயத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதை உணர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதெனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

திமுக கூட்டணியில் கடந்த பத்து ஆண்டுகளாக மமக கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது. 40 தொகுதியிலும் இந்திய கூட்டணியின் கருத்தியலை மக்களிடம் கொண்டு சென்றோம். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது. வருகிற 2025-ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் திமுக, மமக கட்சிக்கு ஒரு தொகுதி கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மமக சார்பில் வழக்கு தொடுப்பது என நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

மேலும்  நடைபெற்ற செயற்குழுவில் எந்தவித குற்றச்சாட்டும் நிர்வாகிகள்
தெரியவில்லை. எந்தவித முடிவும் தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை. இந்தியா கூட்டணி தற்போது பலமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் கேட்டிருந்தால் தயக்கமாக இருந்திருக்கும். தற்பொழுது இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தோல்வி பயம் பாஜகவுக்கும், மோடிக்கும் வந்துள்ளது. அதன் விளைவாகத்தான் அவசர அவசரமாக சிஐஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.