ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆட்சிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஈரோடு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிவியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணகுமாரின் தாயார் பூவாத்தாள் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சரவணகுமார் இல்லத்திற்கு சென்று, அவரது தாயாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அண்மைச் செய்தி : ’மத்திய பட்ஜெட்டால் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை’ – ப.சிதம்பரம்
பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், ”ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆட்சிக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமிக்கும், ஈரோடு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
திமுக, அதிமுக கட்சியினர், தேர்தலில் பணத்தை வாரி வழங்கி வருகின்றனர். ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கு செலவு செய்கின்றனர். இதை தேர்தல் ஆணையம்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். ஈரோடு மக்கள் புத்திசாலிகள். எது சரி என்று அவர்களுக்கு தெரியும். அதை நிச்சயம் அவர்கள் செய்வார்கள்” என்று தெரிவித்தார்.








