நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பேரணி நடத்தி வருவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்திக்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு நாள்களாக நாடளுமன்றம் முடங்கியது.
அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு நிராகரித்து வருகிறது. இந்நிலையில், அதானி விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டன.
இதில், திமுகவின் டி.ஆர்.பாலு, மதிமுகவின் வைகோ, சிவசேனா (உத்தவ் அணி) சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தி அனைத்து எம்.பி.க்களிடமும் கையெழுத்து வாங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.







