நாங்குநேரி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் தொலைக்காட்சி
ஒளிப்பதிவாளார் உயிரிழந்தார் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சந்திரன் 3 தரையிறங்குவது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து பேட்டி எடுப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர் குழுவினர் நேற்று மாலை ஒரு காரில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லை நோக்கி திரும்பி வந்தனர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் நாங்குநேரி நான்குவழி சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்த போது, கார் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்(32) தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன்(45) நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர்
வள்ளிநாயகம்(38) மற்றொரு ஒளிப்பதிவாளர் நாராயணன் (35) ஆகியோர் படுகாயம்
அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்
சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாங்குநேரி போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை செய்தியாளர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து விபத்தில் சிக்கிய சக செய்தியாளர்களுக்கு உதவி செய்தனர். விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை விபத்தில் உயிரிழந்தரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் நிவாரணமும் தெரிவித்துள்ளார். அதன்படி சாலை விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர்கள் 3 நபர்களுக்கு தலா ரூ.50,000-ம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.







