ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்கள்.
அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் மதியம் ராஜபாதர் தெருவில் கார்த்தி(எ) கார்த்திகேயன் (36) பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரக்கோணத்தில் கடந்த 2019 ஆண்டு பிரவீன்குமார் என்பவரை 5 பேர் கும்பல் பொது மக்கள் அதிகம் கூடும் கடைத்தெருவில் வெட்டி கொன்றது. அதற்கு பழியாக கடந்தாண்டு கோகுல் என்பவரை பிரவீனின் நண்பர்கள் அரக்கோணம் பேருந்து நிலையம் அருகே ஓட ஓட வெட்டி கொலை செய்தனர். இப்படி தொடர் பழிவாங்கும் கொலைகளால் அரக்கோணம் பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில்
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஜபாதர் தெருவை சேர்ந்த கார்த்தி(எ) கார்த்திகேயன் கடந்த 4 ம் தேதி கொரோனா தொற்று காரணமாக பரோலில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த எதிர் கோஷ்டியினர் நேற்று முன்தினம் மதியம் ராஜபாதர் தெருவில் கண்ணன் என்பவருடன் வீட்டு மாடியில் மது அருந்த வந்த கார்த்தியை 8 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி தப்பினர்.
இந்த சம்பவத்தில் கார்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்திய அரக்கோணம் நகர காவல் துறையினர் அரக்கோணத்தின் பல்வேறு பகுதியில் பதுங்கி இருந்த சசிகுமார்(எ) கௌதம்(26), குருபிரசாத்(26), தியாகராஜன்(22) ,மணிவண்ணன் (37) ,கண்ணன்(23) மற்றும் ஜெகன்(18) ஆகிய ஆறு பேரை கைது செய்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலடைத்தனர்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்கள். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் ஐந்து பேர் இன்னும் 25 வயதைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ஓம்பிரகாஷ் மீனா அரக்கோணம் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ரவுடியிசத்தை ஒழிப்பேன் என்றும் ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் முன்விரோத படுகொலைகளால் அரக்கோணம் நகரம் தற்போது கொலை நகரமாக மாறியுள்ளது, இது அங்குள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .