திருவண்ணாமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி அளவுக்கு நடந்த மோசடியைக் கண்டித்து இளைஞர்கள், சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வருபவர் பிரேம்குமார். இவர் தஞ்சாவூர், அரியலூர், மாயவரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஏஜென்ட்கள் மூலம் தங்கும் விடுதியில் அறை எடுத்து, படித்த வேலையில்லாத ஏழை எளிய இளைஞர்களைக் குறி வைத்து, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகக் கூறப்படுகிறது. அவரிடம் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ரூ.50,000 முதல் ரூ.1.70 லட்சம் வரை பணம் கொடுத்தாகக் கூறப்படுகிறது.
பணம் பெற்றவர்களுக்கு உறுதியளித்தபடி பிரேம்குமார் வேலை வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் வேட்டவலம் புறவழிச் சாலையில் இருக்கும் பிரேம்குமாரின் கார் உதிரிபாக கடையில் வைத்து பணத்தை திருப்பித் தருமாறு இளைஞர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பிரேம்குமார், உரிய பதிலளிக்காமல் கட்சிக்காரர்களையும் அடியாட்களையும் வரவழைத்து, ஏமாந்த இளைஞர்களை விரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள், வேட்டவலம் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
—சௌம்யா.மோ






