தேமுதிக சார்பில் விருப்பமனு விநியோகம் நாளை தொடக்கம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தகுதியுள்ள நபர்கள் தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை 06.02.2026 முதல் 12.02.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை கொள்ளலாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.