மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையேற்று நடத்தினார். பேரணியை நிறைவு செய்த கிருஷ்ணசாமி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனு அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திராவிட மாடல் என்று பேசுகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மதுபான உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவை டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை மூலம் வரி வருவாயாக ரூ.44 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதனை அடுத்த ஆண்டில் ரூ.52 ஆயிரம் கோடியாக உயர்த்த அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
டாஸ்மாக் துறையில் நடைபெறும் இந்த ஊழலுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம். அவரின் ஆதரவில்லாமல் ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்து வரும் இந்த ஊழல் குறித்து ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.