அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்பதால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இவர்களை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களம் காண்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29-ஆம் தேதியும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அசாமில் 17.87 சதவீத வாக்குகளும், கேரளத்தில் 16.23 சதவீத் வாக்குகளும், புதுச்சேரியில் 17.41 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.







