அசாம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, நமது இளைஞர்களுக்கும், பெண் வாக்காளர்களுக்கும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன்.
புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2026 அசாம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அசாம் மக்கள் பெருமளவில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தின் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, இந்தத் தேர்தலை ஜனநாயகம் மற்றும் பொதுக் கடமையின் கொண்டாட்டமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.
2026 சட்டசபை தேர்தலில் பெருந்திரளான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு கேரள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சாதனை அளவிலான வாக்குப்பதிவு, கேரளாவின் ஜனநாயக உணர்விற்கு புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக, மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







