சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப் பின், ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தின் சோதனை ஓட்டம் நாளை காலை 7 முதல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, அங்கு ஆய்வுப் பணிக்குப் பிறகு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது, அதாவது குறிப்பிட்ட இந்திய கடல்பகுதியில் இறங்கச் செய்வதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். வரும் 2024-ம் ஆண்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. இந்நிலையில் ஆந்திர பிரதேசம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி மையத்திலிருந்து வரும் நாளை காலை 7 – 9 மணிக்குள் ககன்யான் சோதனை ஓட்டம் செய்யப்படுவதாக இஸ்ரோ தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் அண்மையில் அறிவித்தது. ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.







