மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட, என்டிஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நரேந்திர மோடி, 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்களவை சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முனைப்பு காட்டின. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று (ஜூன் 24) முதல் எம்.பி.,க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
கடந்த 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, ஓம் பிர்லா சபாநாயகர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாட்டில் இதுவரை மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணித் தரப்பில் இம்முறை வேட்பாளரை நிறுத்தி உள்ளது. ஆனால் மக்களவைத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரியுள்ளார்.
இதுகுறித்து ராகுல்காந்தி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்பதாகவும், ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.