கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. பணத்தை மீட்டு தர வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
திருவாரூர், கூத்தாநல்லூர் அருகே பொதக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாகுல்
ஹமீது. இவர் கும்பகோணம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த அர்ஜுன்கார்த்தி
என்பவர் நடத்திவரும் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி மூலம் ஆன்லைன்
வர்த்தகத்தில் அதிக லாபம் பெறலாம் என முதலீடு செய்து உள்ளனர்.
அதில் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதத்திற்கு ரூபாய் 15 ஆயிரம் தருவதாகவும் முதல் 8 மாதத்திற்குள் முழு பணமும் கிடைத்துவிடும் எனவும் 18மாத தவணை கட்ட வேண்டும் மீதம் உள்ள 10 மாதம் வரும் பணம் லாபம் என தெரிவித்துள்ளனர். அதற்கு 100 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி ஆவணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்படி சாகுல் ஹமீது முதல் கட்டமாக 5 லட்சமும், இதே போல் தனது உறவினர்களிடம்
சுமார் ரூபாய் 3 கோடியே 59 லட்சத்து 40 ஆயிரம் பணம் வாங்கி கொடுத்துள்ளார். அர்ஜுன் கார்த்தி, அவரது இரண்டாவது மனைவி ரிவாஞ்சலி, விக்கி, நவீன் ஆகிய நான்கு நபர்கள் நேரடியாக வீட்டில் பணத்தை பெற்றுள்ளனர்.
முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு மட்டும் 15ஆயிரம் வீதம் பணம் கொடுத்து உள்ளனர்.
அதற்குப் பிறகு ஆறு மாதத்திற்கு மேலாக பணம் எதுவும் கொடுக்காததால் பணத்தை அர்ஜுன் கார்த்தியிடம் கேட்டபோது, அதற்கு அவர் ஆள் வைத்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். .இதே போன்று பலரும் தங்களது பணத்தை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளனர். புகார் கொடுத்தவர்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட தொகையானது ரூ 100 கோடி என தெரியவந்துள்ளது.
ம. ஶ்ரீ மரகதம்