தொடர் கனமழை பாதிப்பு:  எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் ஆய்வு!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை (டிச.19) நேரில் பார்வையிட உள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை (டிச.19) நேரில் பார்வையிட உள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை – நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.  நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் பார்வையிட உள்ளார்.  நாளை (டிச.19) காலை சென்னையில் இருந்து விமான மூலமாக மதுரை வரும் எடப்பாடி பழனிச்சாமி சாலை மார்க்கமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதோடு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.