திமுக அரசு, தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய அண்ணாமலை, திமுக அரசு தமிழை வைத்து வியாபாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழில் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் மொழியை தமிழக அரசு புறக்கணிப்பதாக கூறி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று பாரதிய ஜனதா கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசும்போது ” தமிழகத்தில் தமிழ், தமிழ் என்று ஆட்சியாளர்கள் ஏமாற்றியது போதும். இனி வரும் காலங்களில் நமது குழந்தைகள் மற்றும் சந்ததியினர் எத்தனை மொழி படிக்க வேண்டுமோ அத்தனை மொழிகளையும் படித்து வாழ்க்கையில் முன்னேற நாம் வழி வகுக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் மட்டுமே படிக்கும் பல மொழிகளை செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் வரை படிக்க வேண்டும். அதேபோன்று கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் படிக்கும் படிப்பை ஏழை மாணவ மாணவிகளும் படித்து வாழ்க்கையில் கோலோச்ச வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும், தமிழ்மொழியைக் காக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.