உலக அளவில் இந்தியா விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொள்ளாச்சி – கோவை சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் தென்னை விவசாயிகள் தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தியாளர்கள், ஆலோசனைக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், விழாவில் பேசிய நரேந்திர சிங் தோமர், “இந்தியாவில் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக விவசாயிகள் பல்வேறு விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானது. உலக அரங்கில் இந்தியாவை பார்க்கின்ற போது விவசாயத்தில் முதன்மையாக தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கி வருகிறது. விவசாயத் துறையில் பல்வேறு புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் உலக அளவில் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது” என்று தெரிவித்தார்.
நாடு முன்னேற வேண்டும் என்றால் விவசாயிகளின் வாழ்வு முன்னேற வேண்டும் என்ற அவர், இதற்காகத்தான் பிரதமன் மோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.6,000 செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தினார். இதுவரை இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
காங்கிரஸ் ஆட்சியில் ரூ.100 விவசாயிகளுக்கு அனுப்பினால் இடைத்தரகர்களின் தலையீடு காரணமாக15 ரூபாய் தான் சென்று சேர்ந்தது என்று குற்றம்சாட்டிய அவர், ஆனால் பிரதமர் மோடி செலுத்தும் தொகை முழுவதும் விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செல்கிறது என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மத்திய அரசால் செயல்படுத்தும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதாக திருட முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி நீங்கள் செயல்படுத்தியதாக அறிவித்துக் கொள்ளலாம். ஆனால், தமிழக மக்கள் மனங்களில் இருக்கும் நரேந்திர மோடி என்ற பிம்பத்தை யாராலும் அழிக்க முடியாது என்று பேசினார்.







