அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று நோக்கும் இந்திய மக்களவை தேர்தல் இன்று தொடங்கியது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
இதையும் படியுங்கள் : “வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் ஊராட்சி, அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்ப உறுப்பினர்களுடன், சென்று நீண்டவரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து, வாக்குப்பதிவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
“நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







