உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று நிறைவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது..
காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை 10சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து வைத்து துவங்கி வைத்தார். இந்த போட்டியில் 825 காளைகளும், 303 மாடுபிடி வீரர்களும் களம்கண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போட்டியில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை சிதறடித்தது. காளைகளே அதிகளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது. இறுதியாக முடிவுக்கு வந்த ஜல்லிகட்டில் பரிசுகள் வென்றவர்கள்..
சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சார்ந்த அபி சித்தர் 26 காளைகளை பிடித்து முதல் பரிசாக 7 லட்சம் மதிப்பிலான நிசான் மேக்னட் கார் மற்றும் ஒரு பசுமாடு பரிசை தட்டிச் சென்றார்.
சிவகங்கை மாவட்டம் ஏனாதியை சார்ந்த அஜய் 20 காளைகளை பிடித்து 2ஆவது பரிசாக ஹோன்டா ஷைன் பைக் தட்டிச் சென்றார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சார்ந்த ரஞ்சித் 12 காளைகளை பிடித்து 3ஆவது பரிசாக ஸ்கூட்டி பைக்கை தட்டிச் சென்றார்.
களத்தில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் காளைக்கு 7 லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் மேக்னட் காரும், பசுமாடு ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த காளையாக இரண்டாம் இடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் எம்.எஸ்.சுரேஷ் என்பவரது காளைக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாகவும, 3வது சிறந்தகாளையான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வெள்ளம்பழம்பட்டி பட்டானி ராஜா என்பவரது காளைக்கு ஸ்கூட்டி பரிசாகவும் வழங்கப்பட்டது.
மாடுகுத்தியதில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் காவல்துறையினர் என 53 பேர் காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக 10பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த போட்டியினை 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆராவாரத்துடன் உற்சாகமாக பார்வையிட்டனர். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து காளைக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், லேப்டாப், சைக்கிள், பணம், சேர், உள்ளிட்ட ஏராளமான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் அதிகளவிற்கு பெண்களால் வளர்க்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட நிலையில் சென்னகரம்பட்டி செல்வராணி, ஆனையூர் மாணவி தீப்தி, மதுரையை சேர்ந்த வேதா, ஆனையூர் ஐராவதநல்லூர் யோகதர்சினி உள்ளிட்ட ஏராளமான காளைகள் வெற்றிபெற்று பரிசுகளை தட்டிசென்றது.
இதேபோன்று காவல்துறையினர் சார்பில் அவிழ்க்கப்பட்ட காளைகளும் பரிசுகளை தட்டிசென்றது. இந்த ஆண்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பெரும்பாலும் காளைகளே அதிகளவிற்கு வெற்றிபெற்று பரிசுகளை தட்டிசென்றது.