அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வின் செயற்க்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் உட்கட்சி தேர்தல் ஆணையர்களாக மூத்த தலைவர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது எனவும் வேட்பு மனு பரிசீலனை 5-ம் தேதி காலை 11.25 மணிக்கு நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுதல் 6-ம் தேதி மாலை 4 மணியோடு நிறைவடைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் 7-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் 8-ம் தேதி புதன்கிழமை தெரிவிக்கப்படும் என்றும் இதேபோல், கிளைக் கழகம், பேரூராட்சி வார்டு, நகர வார்டு மற்றும் மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு 2 கட்டங்களாக உட்கட்சி தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13 மற்றும் 14-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 22 மற்றும் 23-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கான ரசீது மற்றும் புத்தகம், வெற்றி படிவத்தைத் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டத்திருத்த விதிமுறைகளின்படி தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.








