ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தின் மூலம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும். முதலீட்டை பெற்றுத்தரும் ஏஜெண்டுகளுக்கு அதிக கமிஷன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்ட ஆருத்ரா நிதிநிறுவனத்தை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 920 பேர் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 425 கோடிக்கு முதலீடு செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் அடிப்படையில் கடந்த மே மாதம் 24-ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் சோதனை நடத்தினர். இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாகிகள் 6 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
இந்த நிதிநிறுவனத்திற்கு சொந்தமான 85 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 150 கோடி ரூபாய் அளவில் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களுடன் புகார் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 920 பேர் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனியில் முதலீடு செய்ததாக ஆவணங்களுடன் புகார் அளித்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும் பொழுது மேலும் 300 கோடி ரூபாய் அதிகரித்து மொத்தமாக 2425 கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது
தொடர்ந்து இந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களையும் கணக்கீடு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிறுவனம் தொடர்பான சொத்துக்களை தொடர்ந்து அடையாளம் கண்டு, முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகார் அளித்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்து தகுதி உடையவர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணத்தை, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து திருப்பி கொடுக்கும் பணி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.