ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மற்றும் இயக்குனர்களின் சுமார் 70 வங்கி
கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். புதிதாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம்
ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக
கடந்த மே மாதம் 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா நிதி
நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக
சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆருத்ரா நிதி
நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா பெயரில் செயல்பட்டு வரும்
5 நிறுவனங்கள் மீதும் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர். ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநராக பாஸ்கர் மற்றும் மோகன் பாபு
ஆகிய இருவரை மட்டுமே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக மீதமுள்ள இயக்குனர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இயக்குனர்கள் சிலர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
இந்நிலையில், ஆருத்ராவின் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 11 வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 70 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை அதிகாரியாக பொருளாதார
குற்றப்பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விசாரணையைத்
தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்







