நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, செங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குளத்தூரான். இவருக்கு முப்புடாதி மற்றும் மாரிச்செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து மதுரை-குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் கோழி வளர்ப்பு பண்ணை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மாரிசெல்வத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், ஏற்கனவே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு சென்ற மாரிசெல்வத்தை இடைமறித்து சரவணன் தகராறில் ஈடுபட்டுள்ளார். சாலையில் ஓடிய மாரிசெல்வத்தை சரவணன் ஓட ஓட விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த மாரிச்செல்வம் ரத்தவெள்ளத்தில் சாலையில் துடிதுடிக்க உயிருக்கு போராடிய நிலையில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாரிசெல்வத்தை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மாரிசெல்வத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வத்தை சரமாரியாக வெட்டிய அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்ற நபரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.








