தமிழ் நாட்டில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தத்தின் வாயிலாக மறைவு, இடப்பெயர்ச்சி உள்ளிட்டவை கண்டறியப்பட்டு சுமார் 74 இலட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. தொடர்ந்து தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் ஆயத்தப்பணிகளை அய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு சென்னைக்கு வருகை தந்துள்ளது. ஏர் இந்தியா பயணிகள் விமானத்தின் மூலம், டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த இக்குழுவை தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் வரவேற்றார்.
இதனை தொடர்ந்து இக்குழு தனி விமானத்தில், புதுச்சேரி மாநிலத்திற்கு புறப்பட்டு சென்று அங்கு தேர்தலுக்கான பணிகளை ஆய்வு செய்ய உள்ளது. தொடர்ந்து நாளை (26) மற்றும் நாளை மறுநாள் (27) ஆகிய நாட்களில் தமிழ் நாட்டில் இக்குழு தன் ஆய்வு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது.







