புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில், மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த வருட மீன்பிடி திருவிழாவில், அதிகாலையிலேயே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா,வலை,பரி,கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைபிடித்தனர்.
ஜாதி மதம் பாராமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி,குறவை, ஜிலேபி,கெண்டை, அயிரை, கட்லா,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. தூரி என்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர்.
முன்னதாக ஊர் பெரியவர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வெளியூர் மக்களும் கண்மாய்க்கு வந்து ஆர்வத்தோடு கலந்துகொண்டதோடு, அவர்களும் மீன்பிடித்து மகிழ்ந்தனர். இதில் ஒரு சிலர் இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை எடை கொண்ட கட்லா வகை மீன்களை பிடித்து சென்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








