குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
குஜராத்தில் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிக்களுக்கு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 63% வாக்குகளும், டிசம்பர் 5ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 65% வாக்குகளும் பதிவாகின. பெரும்பான்மை பெற 92 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதால் அங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதேபோல் 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் கடந்த நவம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பிறகு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெரும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் இன்றைய வாக்கு எண்ணிக்கை மீதான மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.







