சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லக்ஷ்மிநாராயணன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 8 பேரை நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு, ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணனை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து கடந்த வியாழக்கிழமை குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லக்ஷ்மிநாராயணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்துள்ளது.









