வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியலின மக்கள் அனைவரும் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை எனவும், குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உடனடியாக இந்த தொட்டியை இடித்து, உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலை நீர் தேக்க தொட்டி மேல் ஏறி நின்று தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கீழே இறங்குவோம் என்று கூறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே இருந்து கீழே இறங்க மறுத்துவிட்டனர்.
பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் நியாஸ் உள்ளிட்டோர் வந்து அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கீழே இறங்க சம்மதிக்கவில்லை. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்த பிறகே நான்கு பேரும் கீழே இறங்கினர். இதையடுத்தது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினரால் கைது செய்தனர்.
இதற்கிடையில் அந்த பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வெளியூர் ஆட்களை அழைத்து வந்து, இங்கு வசிக்கும் பட்டியலின மக்களே இது போன்ற போராட்டங்களில் ஈடுபடு வைப்பதாகவும் , காவல்துறை குற்றவாளிகளை அடையாளம் கண்டும் இன்னும் கைது செய்யவில்லை என்றும், இங்கு வசிக்கு மற்ற மக்களை குற்றவாளிகள் போல் காவல்துறையினர் சித்தரித்து வருவதாகவும் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் தொடர்ந்து பேசுச்சுவார்தை நடத்திய பிறகே, போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற சமூக மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா