திருச்சி இளைஞர் படுகொலை : காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி..!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞள்ரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைதுசெய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன. காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய  முதல்வர்? காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கிஞ்சற்றும் பயம் இல்லாமல் போனதற்கு காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் மு.க ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மேடைதோறும் என்னைப் பற்றி அவதூறு பேசுவதிலும், இல்லாத விஷயத்தை வைத்து அரசியல் செய்வதிலும் இருக்கும் முனைப்பு, ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் ஒருநாளாவது மக்களைக் காப்பதில், சட்டம் ஒழுங்கை சீர்செய்வதில் இருந்ததுண்டா இந்த முதலமைச்சருக்கு? காவலர் குடியிருப்பில் புகுந்து கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.