குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொற்று நோய் சிகிச்சை பெறுவதற்கான 3.65 கோடி
மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அளக்குடி மற்றும் கோமல் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்புகளை காணொளி மூலம் திறந்து வைத்தார். அதேபோல் ரூ.46.50 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ள, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு, புதிய கட்டமைப்புடன் கூடிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.
தற்போது மாரடைப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், அதற்கு கொரோனா பாதிப்பு காரணமா என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் மாரடைப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.








