“அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை!” – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மக்களவை தேர்தல் 2024 வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை என திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து…

மக்களவை தேர்தல் 2024 வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை என திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கடந்த 16.02.2024-ஆம் தேதி முதல் 18.02.2024-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திமுக தொடர் பொதுக்கூட்டத்தை நடத்தியது. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கி நடத்தியது.

இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று திமுக அரசின் சாதனைகளும், மத்திய அரசின் மீதான விமர்சனங்களையும் முன்வைத்து பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த 3 நாள் தொடர் பொதுக்கூட்டங்கள் குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்! வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த திமுக மாவட்டச் செயலாளர்கள் – திமுக முன்னணியினர் என அனைவருக்கும் பாராட்டுகள்! நன்றி! மக்களவை தேர்தல் 2024 வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; INDAI-வை வெற்றி பெறச் செய்வோம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.