பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதும், 40அடி சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு செய்யப்படுவதாக தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது.
இதையும் படிக்கவும்: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் மக்கள்!
கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் நிலம் ஒரு காலத்தில் தரிசு நிலம் என்று குறிப்பிடப்பட்டு ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும், அந்த நிலம் தான் இப்போது ஆக்கிரமிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும், இராம்சர் ஒப்பந்தத்திற்கு எதிரானது.
https://twitter.com/draramadoss/status/1636955218708684800
சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படக்கூடாது; சட்ட விரோதமாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை அளித்துள்ளது. அதற்கு எதிரான செயல்களை அரசு அனுமதிக்கக் கூடாது.
தரிசு நிலம் என்று பட்டா பெறப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள பிற ஆக்கிரமிப்புகளையும் விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.







