மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் நிலத்தை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த 2019
ஆம் ஆண்டு தற்காலிக கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு
வந்தது. நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை சார்பில் 81 லட்ச
ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. எனவே, 3 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் பாதை அமைந்துள்ள நிலப்பகுதி கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமான நிலமாகும். மருத்துவமனைக்கு செல்ல பாதை அமைப்பதற்கு கலியபெருமாள் நிலம் தர மறுத்துள்ளார். எனவே, அந்த நிலத்தை மீட்டு மருத்துவமனைக்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பரவாக்கோட்டை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் மருத்துவமனைக்கு செல்லும் பாதை இருக்கும் நிலத்தை கலியபெருமாள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார் என கிராம மக்கள் குற்றம்
சாட்டினார். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ மற்றும் மன்னார்குடி வட்டாட்சியர் ஜீவானந்தம் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர்.
—ம. ஸ்ரீ மரகதம்