“பாஜக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்கிற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“பாஜக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்கிற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பானை சின்னம் கேட்டு ஒன்றரை மாதங்கள் கழித்து தான் சின்னம் வழங்க முடியாது என தெரிவித்தார்கள். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. பாஜக மற்றும் சங் பரிவாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
எப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள் என தெரியவில்லை. நடைபெற உள்ள தேர்தல் மக்களுக்கும், பாஜகவிற்கும் நடக்கும் இரண்டாம் சுதந்திர போர். அதில் மக்கள் தான் வெற்றி பெறுவார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
பாஜக பட்டியலினத்திற்கு எதிரானது. சமூக நீதிக்கு, அரசியலமைப்புக்கு எதிரானது. அதனை உணர்ந்து அந்த கட்சியிலிருந்து மாநில பட்டியலின தலைவர் தடா பெரியசாமி
அந்த கட்சியிலிருந்து வெளியேறி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை மொழி உணர்வை, இன உணர்வை எப்பொழுதும் கொச்சைப்படுத்தி பேசுபவர் தான். அவ்வாறு பேசுவது அவருக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் விளம்பரம் தேடி தரலாமே தவிர அவர்கள் கட்சிக்கு எந்த பயனையும் தராது” என தெரிவித்தார்.







