பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தோற்றுவித்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைவராக இருந்த அதிமுக கட்சி 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டின் போது மரணம் அடைந்த 8 குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
பின்னர் அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கான மாவட்டத்தில் பணிகளை மேற்பார்வையிடுங்கள். மாவட்டச் செயலாளர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. மாவட்டச்செயலாளர்கள் ஒத்துழைக்கவில்லையென்றால் உடனடியாக என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
தேர்தல் பணிகளில் மாவட்ட செயலாளர்கள் தலையீடு இருந்தால் நேரடியாக புகாரளிக்கலாம். மாவட்ட செயலாளர்களுக்கு பயந்து அவர்கள் சொல்வதை கேட்டு நடக்காமல் கட்சிக்காக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள். பொறுப்பாளர்களுடைய பணிகளையும் கட்சி தலைமை நிர்வாகிகள் கண்காணிப்பார்கள்.
ஒரு பூத்திற்கு 19 பேர் இருக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு தோராயமாக 2000 பூத்கள் வருகின்றன. 19 பேரில் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பூத் கமிட்டி அமைப்பதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
நிறைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன. பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.”
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.







