அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என்று என்னை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது திமுக தான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க விழா, கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. பின்னர் நிருபர்களுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி அளித்தார் அளித்தார்
அப்போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் தான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என்று கூறுகிறார்களே எனக் கேட்டார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி. வேலுமணி, இது திமுக ஐடிவிங்கின் வேலை என்றும் தங்களுக்கு ”எடப்பாடியார்” தான் என்று கூறினார்.
எப்படியாவது அதிமுகவை பிளவுபடுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் திமுக ஐடி விங் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு துரோகம் செய்தவர். ஆனால் நான் ஏக்நாத் ஷிண்டே கிடையாது என்றும் வேலுமணி பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
நான் ஆரம்பத்திலிருந்து கட்சிக்காக பாடுபட்டு வந்தவன். எங்களுக்கு தலைவர் எடப்பாடி தான். அவர் வழியில் சிறப்பாக நடப்போம். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும்.
என் மீது முதலமைச்சருக்கும், திமுகவிற்கும் கோபம் ஏன்?
பாஜவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி விட்டார். அதனை இவர்களால் தாங்க முடியவில்லை. அதனால் இப்படி குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல, யாரையும் பிரிக்க முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.







