சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23- ஆம் தேதி நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் மார்ச் 30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் இந்த வழக்கு ஏப்ரல் 2 (இன்று) ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் படி சாத்தான் குளம் வழக்கானது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் “ குற்றவாளிகள் 9 பேருக்கும் உச்சபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து குற்றவாளிகள் 9 பேருக்கான தண்டனை விபரம் வரும் 6ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







