மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தமா? சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!

டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக பேருந்துகள் நிறுத்தமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த…

டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக பேருந்துகள் நிறுத்தமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள், மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மகாராஷ்டிராவில் அடுத்த முதலமைச்சர் யார்? மகாயுதி கூட்டணியில் தொடரும் இழுபறி!

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை எதிரொலியாக பேருந்து சேவை நிறுத்தம் என சமூக வலைதளத்தில் தகவல் பகிரப்பட்டது. அதில், “மதியம் 1 மணி முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், தற்போது வரை போக்குவரத்து துறை சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. அதில், டெல்டா மழை எச்சரிக்கை காரணமாக பேருந்து சேவை நிறுத்தம் என்ற தகவல் பழைய செய்தி எனவும், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பை தேதியை மறைத்து சிலர் பரப்புவதால் பொது மக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. மேலும், பேருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/tn_factcheck/status/1860986494787465352

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.