தமிழ் மொழி சமமாய் நடத்தப்பட வேண்டும், இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழியை அரசு துறைகளில் அமல்படுத்தும் THE NEW INDIA ASSURANCEன் சுற்றறிக்கையை கண்டிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“ நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், அரசுக்கும் ஏதோ ஒரு வகையில் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது ஆளும் மத்திய அரசு இந்தி மொழிக்கு மட்டும் அதீதமான கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது THE NEW INDIA ASSURANCEன் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தி பேசாத, இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் அரசு துறைகளில் இந்தி மொழியை அமல்படுத்தும் திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். இந்த சுற்றறிக்கையை அனுப்பிய நீரஜ் கபூர் உடனியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும். இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துவதை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் துறைகளான அஞ்சல்துறை, வங்கி, ரயில்வே மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட துறைகளில் இந்தி மொழிக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற வேண்டும்.
நாங்களும் வரி செலுத்துகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறோம். எனவே எங்கள் மொழி சமமாக நடத்தப்பட வேண்டும். தமிழை நீக்கி விட்டு இந்தியை திணிக்க முயன்றால் பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







