குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் விழா நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குன்றத்தூரில் குன்றின் மேல் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆண்டு தோறும் முக்கிய நாட்களில் இந்த கோயிலில் பூஜைகள், விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம் ஆனால் சூரசம்ஹாரம் விழா நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் புதிதாக கோயில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் சூரசம்ஹாரம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது இந்த ஆண்டு முதல் குன்றத்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சூரசம்ஹாரத்தின் போது இருக்க வேண்டிய கடவுள்களின் சிலைகள் புதுப்பிக்கும் பணிக்காக வாகனங்களில் எடுத்து செல்லும் பணி நடைபெற்றது.
கடந்த 1969 ஆம் ஆண்டு சூரசம்காரம் நடைபெற்றதாகவும் அதன் பிறகு பல்வேறு காரணங்களுக்காக சூரசம்ஹாரம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






