சென்னை தேனாம்பேட்டை பகுதியில் விலை உயர்ந்த சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்த நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
தேனாம்பேட்டை காவல் ஆய்வாளரின் மகள் சைக்கிள் உட்பட, விலையுயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறிவைத்து கைவரிசை காட்டி வந்த கொள்ளையனை சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் தனதுவீட்டு வளாகத்தின் உள்ளே நிறுத்தி வைத்திருந்த 20 ஆயிரம் மதிப்புடைய சைக்கிள் காணாமல் போய்விட்டதாகவும் அதனை கண்டுபிடித்து தரவேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, மேற்கு மாம்பலம், அசோக் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சைக்கிள்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவம், தொடர் கதையாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அனைத்து கொள்ளை சம்பவங்களிலும் ஈடுப்பட்டது ஒரே நபர் தான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி அடையாளங்களை வைத்து பார்த்த போது, அந்த நபர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்கிற பாபு என்பதும் இவர் உயர்ரக சைக்கிள்களை மட்டுமே குறிவைத்து திருடும் கொள்ளையன் என்பதும், 2014ஆம் ஆண்டு கேகே நகர் காவல் நிலையத்தில் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இவரை பிடிக்க காவல் ஆய்வாளர் சுப்பரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள சைக்கிள் பஞ்சர் போடும் கடைகள் மற்றும் பழுது பார்க்கும் கடைகளில், கொள்ளையன் வெங்கடேஷின் அடையாளங்கள் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள சைக்கிள் கடைக்கு சைக்கிளில் காற்று அடிக்க வெங்கடேஷ் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடம்பத்தூரில் வசித்து வரும் வெங்கடேஷ், நாள்தோறும் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ சென்னை பகுதிகளுக்கு வந்து, குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு அங்குள்ள சைக்கிளை மட்டுமே குறிவைத்து இரவு நேரங்களில் கொள்ளையடித்தது தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களை திருடினால் போலீசார் சிசிடிவி காட்சிகளில் பதிவான நம்பர் பிளேட்டை வைத்து எளிதாக நெருங்க வாய்ப்புள்ளதாகவும், ஆர்சி புக், உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால், விற்க முடியாத நிலைமை ஏற்படக்கூடும் என்பதால் சைக்கிளை மட்டுமே குறுவைத்து திருடுவதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள விலையுயர்ந்த சைக்கிள் பூட்டு போடாமல் நிறுத்தி இருக்கும் என்பதால் அதை நோட்டமிட்டு, திருடிய சைக்கிளை ஓட்டி சென்றும், ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். சைக்கிள் ஷோரூம் மற்றும் கடைகளில் 2000 முதல் 3000 ரூபாய்க்கு மட்டுமே விற்பதால், அதிக லாபம் என நினைத்து கடைகளில் சைக்கிளை வாங்கி கொண்டுள்ளனர். திருடிய 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் என்றாலும் தனக்கு தேவைப்படும் 2000 ரூபாய்க்கு தான் விற்றுள்ளார். கிடைக்கும் பணத்தை வெங்கடேஷ் குடிக்கவும், உல்லாசமாக இருக்கவும் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 100க்கும் மேற்பட்ட சைக்கிளை வெங்கடேஷ் திருடி சென்னை முழுவதும் விற்பனை செய்துள்ளார். பட்டதாரியான வெங்கடேஷ் படிப்பிற்கு ஏற்ப சரியான வேலை கிடைக்காததால் எளிதாக பணம் சம்பாதிக்க சைக்கிள் திருடும் தொழிலில் இறங்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இவர் சைதாப்பேட்டை ரயில்வே பார்டர் சாலையில் உள்ள தேனாம்பேட்டை, சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் முரளியின் மகள் பயன்படுத்திய வந்த விலையுர்ந்த சைக்கிளையும் கொள்ளையடித்து கைவரிசை காட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வாளர் முரளி, தனிப்பட்ட முறையில் சைக்கிள் கொள்ளையனை தேடி வந்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடமிருந்து 41 சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







