திமுகவை செந்தில் பாலாஜி புகழ்வது சம்திங்கிற்காக தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திருமலை நாயக்கரின் 440-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் மன்னர்
திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா அரசு சார்பாக கொண்டாடப்பட்டது. இதில்
ஏராளமான அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.,
சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர்
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது..
கொங்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை என செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். அவர் பல கட்சிகளுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் அடையாளம் கொடுத்தவர் அம்மா, அ.தி.மு.க., வில் இருக்கும் போது தி.மு.க., குடும்பம் குறித்து தரக்குறைவாக பேசினார். அம்மாவே முகம் சுழித்தார்.
அப்படி பேசியவர் தற்போது இப்படி பேசுகிறார். நாளை எந்த கட்சியில் இருந்து கொண்டு
எப்படி பேசுவார் என தெரியாது. எனவே செந்தில் பாலாஜி பேச்சையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். கரூரில் ஸ்டாலினும், கனி மொழியும் பேசாத பேச்சா. இவரைப் பற்றி அவர்கள் பேசியதும். அவர்களைப் பற்றி இவர் பேசியதும் வரலாறு உண்டு.
ஆனால் தற்போது மாறி மாறி புகழ் பாடிக்கொள்கின்றனர். எல்லாம் எதற்கு சம்திங்கிற்கு தான்” . ஈரோடு தேர்தல் நடக்கப் போகும் மாற்றத்தால் மக்களுக்கு பயந்து கொண்டு ஆளும் திமுக அரசு பலவற்றை செய்ய உள்ளது. தி.மு.க., அரசு பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்தது. ஆனால் எடப்பாடியார் பக்கம் தான் மக்கள் உள்ளனர். எனவே ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் மிகப்பெரும் மாற்றத்தை தர உள்ளனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜூ தெரிவித்ததாவது..
கலைஞர் பேனா குறித்து அதன் கருத்து கேட்பு கூட்டத்திலேயே தெரிந்து விட்டது. அதனை
யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கடலில் சிலை அமைக்க பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைப்பது நடக்காத காரியம். ஆனாலும் பேனா அமைப்பது தொடர்பான முன்னெடுப்புகளை செய்யக் கூடாது” எனக் கூறினார்.
– யாழன்







