லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் பேரணியில் கார் புகுந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிர்சா பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 8ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கார் புகுந்தது. இதனையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகள் மீது மோதிய கார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடையதாகும். இதனால் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு (SIT) நேற்று தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என்றும் இதில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து இன்று மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, லக்கிம்பூர் கெரி சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்றும், அமைச்சர் பதிவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சிறப்பு விசாரணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டிய அவர் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையிலிருந்து அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதேபோல உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது.
ராகுல் காந்தியை தொடர்ந்து தமிழக எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்தனர். எதிர்க் கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.